எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 – டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சுப்புலட்சுமி அவர்கள் தமிழ்நாட்டின் மதுரையில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே இசை கற்றுக்கொள்ளத் துவங்கிய இவர் தனது பத்தாவது வயதில் முதல் இசைப்பதிப்பை வெளியிட்டார்.
செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்களிடம் கருநாடக இசைப்பயிற்சியும் பண்டிதர் நாராயண ராவ் வியாஸ் அவர்களிடம் இந்துஸ்தானி இசைப்பயிற்சியும் பெற்றார். தனது 17-வது வயதில் தன் முதல் அரங்கேற்றததை நிகழ்த்தினார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார்.
சுப்புலட்சுமி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1945-ல் இவர் நடித்து பக்த மீரா படம் மிகவும் புகழ்பெற்றது. விடுதலைப் போராட்ட வீரரான கல்கி சதாசிவம் அவர்களை 1940 ஆண்டு சுப்புலட்சுமி அவர்கள் மணந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
1997-ல் அவரது கணவரின் இறப்புக்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் இவர் கலந்துகொள்ளவில்லை. இவர் டிசம்பர் 11, 2004-இல் இயற்கை எய்தினார்.
விருதுகள்
பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளன. அவையாவன:
பத்ம பூசண் – 1954 சங்கீத கலாநிதி – 1968 ராமன் மகசேசே விருது – 1974 பத்ம விபூசண் – 1975 காளிதாச சன்மான் – 1988 நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது – 1990 பாரத ரத்னா – 1998
வெளி இணைப்புகள்
“ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என குழந்தைகளுக்கு இதமான பாடலை பாடினார் மகாகவி பாரதியார். அவ்வாறே ஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள். வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு “பாடு” என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து “இவள் தாயை மிஞ்சி விடுவாள்” என்றார்கள். அது போலவே நடந்தது. சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது. அந்தச் சிறுமி தான் இசையுலகம் போற்றும் இசையின் இமயம், இசையின் ராணியான எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள். மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதன் சுருக்கமே எம். எஸ். சுப்புலட்சுமி ஆகும்.
“இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்” என புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதை எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார். இந்தியாவின் அந்த மாபெரும் கலைஞருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருதும் வழங்கப்பட்டது.
பிறப்பும், குடும்பப் பின்னணியும்
எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் 1916 புரட்டாதி மாதம் 16 ஆம் திகதி அன்று தேவதாசி குலத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் மதுரை சண்முகவடிவு அம்மாளுக்குப் பிறந்தார்.அவரது தந்தையார் சுப்பிரமணிய அய்யர் என்று பின்னாட்களில் பேட்டிகளில் சுப்புலட்சுமி தெரிவித்து இருக்கிறார். இவர் தம் சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலில் வளர்ந்தார். இவரது தாயார் சண்முகவடிவு போன்றே வடிவாம்பாள் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். ஆயினும் அவர்கள் இருவரும் இளவயதிலேயே காலமாகி விட்டனர். சுப்புலட்சுமியின் பாட்டியார் அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர். இசையுலகில் காலடி
சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார். சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது சென்னை ஆளுநர், சண்முகவடிவின் வீணை இசையை ஒளிப்பதிவு செய்யச் சென்றார். அப்போது மகளையும் பாடச் சொன்னார். சிறுமி சிறிதும் தயங்காமல் “மரகத வடிவம்” என்ற செஞ்சுருட்டி இராகப் பாடலை உச்சஸ்தாயியில் பாடினார். இதைக் கேட்ட ஆளுநர் ஆச்சரியமடைந்து அப்பாடலையும் ஒளிப்பதிவு செய்து கொண்டார்.
இசை ஆர்வம்
இசைப்பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன் பல கச்சேரிகளிலும் இவர் பங்கேற்றதுண்டு. செம்மங்குடி சிறீனிவாச ஐயர், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், ராஜ மாணிக்கம் பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை, பாலக்காடு மணி ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம் போன்ற ஜாம்பவான்கள் இடம் பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் சென்று ரசித்ததும் உண்டு. எம். எஸ். சுப்புலட்சுமி சிறு வயதில் தன் தாயாருடன் கச்சேரிகளுக்குச் சென்ற போது பெரிய கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல் வளத்தை வாழ்த்தியதும் உண்டு. இவரது முறையான கல்வி ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்தது. இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசியிடமிருந்து கற்றார். அப்துல் கரீம்கான் மற்றும் பாதே குலாம்கானின் இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.
1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.பி இசைத்தட்டில் “மரகத வடிவும்செங்கதிர் வேலும்” எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமி பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இது தான். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழபட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப்பிள்ளை தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935ம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி தான் எம். எஸ். சுப்புலட்சுமியின் சங்கீதத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்தார். அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன.
சினிமாவினுள் பிரவேசம்
அந்தக் காலத்தில் பாடகிகள் தான் நடிகை ஆகமுடியும். எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலைக்கேட்ட தயாரிப்பாளர் கே.சுப்பிரமணியம், அவரைத் தனது “சேவாசதனம்” படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். 1936- 1937 களில் வெளிவந்த படத்தில் “ஆதரவற்றவர்க்கெல்லாம்” என்ற ஜோன்புரி இராகப்பாடலும், “இஹபரமெனுமிரு” என்ற சிம்மேந்திரமத்திமம் இராகப் பாடலும் இன்னும் பலரின் நினைவில் உள்ளன.
சகுந்தலை
அதனைத் தொடர்ந்து காளிதாசனாரின் சகுந்தலை படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். “மிகக் குதூகலிப்பதும் ஏனோ”, “எங்கும் நிறை நாதப்பிரம்மம்”, “பிரேமையில் யாவும் மறந்தேனே” ஆகிய பாடல்கள் மிகவும் புகள் பெற்றவை. இப்படத்தில் துஷ்யந்தனாக நடித்தவர் சங்கீத வித்துவான் ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆவார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் கோகிலகான இசைவாணி என விளம்பரம் செய்யப்பட்டார்.
திருமணம்
சகுந்தலை படத்தைத் தயாரித்தவர் டி. சதாசிவம் ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரதும் இணைப்பால் இசை உலகு நன்மையடைந்தது. 1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்டார். அப்போது எழுத்தாளர் கல்கியும் ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி இருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க விருப்பம் கொண்டனர். ஆனால் கைவசம் பணம் இருக்கவில்லை. ஆதலால் சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் சொன்னார். அதற்காகவே சுப்புலட்சுமி சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகையில் கல்கி வாரஇதழ் தொடங்கப்பட்டது. சாவித்திரி படத்தில் “மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே”, “மங்களமும்பெறுவாய்” போன்ற சில பாடல்கள் புகழ் பெற்றவை.
மீரா திரைப்படத்தின் வரவேற்பும், சமூக சேவைகளும்
சதாசிவம் இசைப்பிரியன் மாத்திரமல்ல, இசை கற்றவருங்கூட. அதனால் மனைவியின் இசையை பக்தி மார்க்கத்துக்குத் திருப்ப முயன்றார். பக்த மீரா எனும் திரைப்படம் 1945 இல் வெளியிடப்பட்டது. இப்படம் அற்புதமான பாடல்கள் நிறைந்தது. “காற்றினிலே வரும் கீதம்”, “பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த”, “கிரிதர கோபாலா”, “எனது உள்ளமே” போன்ற பாடல்கள் இன்னமும் அனைவரது செவிகளிலும் ஒலிக்கின்றன. பக்த மீரா இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, வட நாட்டவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர் ஜவஹர்லால் நேரு, கவியரசு சரோஜினி நாயுடு ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு “இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே” எனப் பாராட்டினார்.
இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. அதே போல கேதாரி நாத்திலிருந்து கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது. 1944 இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.