பம்மல் சம்பந்த முதலியார் (பெப்ரவரி 9, 1873 – செப்டம்பர் 24, 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாஅணங்களைக் கொண்டவர். சென்னையில் பம்மல் விசயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் 1873 மாசி முதல் நாளன்று பிறந்தார். விசயரங்க முதலியார் முதலில் தமிழ் உபாத்தியாயராகவும், பின்னர் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ் என்ற அரசு உத்தியோகத்திலும் இருந்தவர். அவர் தானே தமிழ் புத்தகங்கள் பல வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார். சிறுவயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், தமிழ் நாடகப் போக்கில் இழிந்த நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார். 1891 இல் பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் பற்றினை உண்டு பண்ணின. அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்த முதலியார் தாமும் அது போல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார். சீரழிந்த நிலையில் அவதிப்படும் தமிழ் நாடகத்தை சீர்படுத்திட வேண்டும் என்ற இவரது ஆவலும் இவரை நாடக உலகிற்குள் புகுத்தியது. நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில், 1891 ஜூலை 1 ஆம் நாள், “சுகுண விலாச சபை” என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.
நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார். 22வது வயதில் அவருடைய முதல் நாடகம் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற பெயருடன் அரங்கேறியது. மொத்தம் 80 நாடகங்கள் எழுதினார். 1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்றார். 1963 இல் பத்மபூஷண் என்ற பட்டத்தையும் பெற்றார். தன் நாடகங்களில் சிலவற்றில்செய்யுள், கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார். தமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்.
செகப்பிரியரின் Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற நாடகங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் ‘அமலாதித்யன்’, ‘நீ விரும்பியபடியே’, ‘மகபதி’, ‘சிம்மளநாதன்’, ‘வணிபுர வானிகன்’ என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்.